
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பாரத பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் அமைந்துள்ள கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலையில் கறுப்பு தலைப்பாகை கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியினால் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது தமிழகம் வராத பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வந்துள்ளார்.
தமிழக அரசு கேட்ட நிவாரண தொகை 37,000 கோடியில் ஒரு காசு கூடத் தராத நிலையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பாரத பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே இன்று நடைபெறும் பொது கூட்டத்திற்காக வரும்பொழுது எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் தலையில் கறுப்பு தலைப்பாகை கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



