
பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் மஜ்லிஸ் கட்சியின் வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், வாக்களித்த மக்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அசாதுதீன் ஓவைசி, தனது ஐந்து வேட்பாளர்களையும் மீண்டும் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
பீகாரில் தங்கள் கட்சி ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றதற்குத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனக்கு வாழ்த்துக் கூறியதாகவும் ஓவைசி தெரிவித்தார்.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் 200 இடங்களைப் பெறும் என்று தான் எண்ணவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக் கூறிய அவர், சீமாஞ்சலின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் ஓவைசி தெரிவித்தார்.





