
CID Sakunthala : நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரின் திரையுலகப் பயணம்பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்தவரான சகுந்தலா, 1960-ம் ஆண்டுக் கைதி கண்ணாயிரம் படம்மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சகுந்தலா, ஜெய்சங்கர் நடிப்பில் 1970-ம் ஆண்டு வெளியான சிஐடி சங்கர் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அப்படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததால் சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் சிஐடி சகுந்தலா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் உடன் தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, பாரதவிலாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிஐடி சகுந்தலா, எம்.ஜி.ஆர் உடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியபின்னர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த சிஐடி சகுந்தலா, பின்னர் பெங்களூருவில் உள்ள தன் மகளின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக சிஐடி சகுந்தலா நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிறுவயதிலேயே கலைகள்மீது அதீத ஆர்வம் இருந்ததால் நடிக்க வந்தார் நடிகை சிஐடி சகுந்தலா. இவருக்கு உடன் பிறந்தவர் ஆறு பேர், அதில் நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளும் அடங்கும். அவர்களையும் தன்னுடைய வருமானத்தில் தான் காப்பாற்ற வேண்டும் என்கிற இக்கட்டான நிலை இருந்ததன் காரணமாக இரவு பகல் பாராமல் உழைத்தார் சகுந்தலா. ஆரம்ப காலகட்டத்தில் குரூப் டான்சராகப் பணியாற்றிய சகுந்தலா, அன்பே வா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடனமாடி இருக்கிறார்.
குரூப் டான்சர்களில் ஒருவராக இருந்த சகுந்தலா திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இதனிடையே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் சகுந்தலாவின் கட்டான உடலையும், களையான அழகையும் பார்த்து அவருக்குத் தங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு அளித்தார். அப்படி அவர் ஹீரோயினாக அறிமுகமான படம் தான் சிஐடி சங்கர். அந்தப் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாகச் சி.ஐ.டி வேடத்தில் நடித்ததன் காரணமாக, அவருக்கு சிஐடி சகுந்தலா என்ற பெயர் வந்தது.
குரூப் டான்சராக இருந்து பின்னர் ஹீரோயின் ஆன சகுந்தலா, ஒரு கட்டத்தில் வில்லி வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் முதன்முதலில் வில்லியாக நடித்த படம் கண்காட்சி, பின்னர் சிவாஜி கணேசனின் தவப்புதல்வன் உள்பட சில படங்களில் வில்லி வேடம் ஏற்று நடித்த சகுந்தலா, அந்தக் காலகட்டத்தில் கவர்ச்சி நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
1970களில் பிசியாக நடித்து வந்த சகுந்தலாவுக்கு 1980களில் புதுப்புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் சரியத் தொடங்கியது. இதனால் ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா, சீரியல் பக்கம் சென்றார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான சொந்தம், குடும்பம், வாழ்க்கை, விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி போன்ற சீரியல்களில் நடித்த அவர் தற்போது இயற்கை எய்திய செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

