
புதுடில்லி: டில்லியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் மற்றும் காங்., எம்.பி., ராகுலுக்கு ஒரே பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்விலாஸ் பஸ்வான்
கடந்த 2003ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராம் விலாஸ் பஸ்வானுக்கும், ஜன்பத் பகுதியில் எம்.பி.க்களுக்கான அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. இதன் விளைவாக, ராம் விலாஸ் பஸ்வான், பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்.
வாரிசுகள்
இந்த நிலையில், தற்போதைய அரசியலிலும் மீண்டும் அதே போலச் சம்பவம் நடப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவரும், காங்., எம்.பி., யுமான ராகுல் காந்திக்கு சுனேரி பாக்கில் 5வது பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் வாரிசும், தற்போதைய மத்திய அமைச்சருமான சிரக் பஸ்வானுக்கு அதே பகுதியில் முதல் பங்களா கொடுக்கப்பட்டுள்ளது.
அச்சம்
இது டில்லி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. காரணம், 2003ம் ஆண்டில் நடந்ததைப் போல, 2024லும் நடந்து விடுமோ…? என்ற அச்சம் தான்.
எதிர்க்கட்சிகள் முயற்சி
ஏற்கனவே, கூட்டணி கட்சிகளின் தயவில் மத்தியில் பா.ஜ., 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
வாய்ப்பு
ஆனால், அந்த முயற்சிகள் ஏதும் கைகொடுக்கவில்லை. இருப்பினும், பா.ஜ., வின் இந்த ஆட்சி ஓராண்டு கூடத் தாக்குபிடிக்காது என்று காங்., தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போதைய இந்த வாய்ப்பைக் காங்கிரஸ் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்று அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
5 எம்.பி., க்கள்
பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 எம்.பி., க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

