
சென்னையில் ராணுவ வீரரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி(36). இந்நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த வேளாங்கண்ணி தாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி இரவு தலைக்கேறிய மதுபோதையில் படுக்கை அறையில் சுய நினைவின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி லீமா ரோஸ் மேரி (36), அவரை மீட்டு ஆவடி ராணுவ மருத்துவமனை கொண்டு சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணி தாஸ் உடலைப் பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரதுது மனைவி லீமா ரோஸ் மேரியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் இருந்த கணவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். விசாரணையில், என் கணவர் தினமும் மது போதையில் என்னிடம் தகராறு செய்ததால் புடவையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நாடமாடினேன் எனக் கூறியுள்ளார். இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி லீமா ரோஸை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.

