
ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
சென்னை: ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மத்திய கைலாஷ் பகுதியில் ‘எல்’ வடிவதிலும் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் ‘யு’ வடிவத்திலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
450 மீட்டர் நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘யு’ வடிவ மேம்பாலத்தில் 40 அடி இடைவெளியில், 20 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளின்போது இடையூறாக இருந்த மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


