
லண்டனில் இருந்து 224 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், தரையிறங்குவதற்கு முன்னதாக சுமார் 500 அடி உயரத்தில் பறந்தபோது எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று மோதியது. இதில் அந்தப் பறவை விமானத்தின் என்ஜின் பகுதியில் சிக்கிக்கொண்டது. இருப்பினும், விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டினால் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு, அதில் பயணம் செய்த 236 பேரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, என்ஜின் பகுதியில் சிக்கிய பறவையின் பாதிப்புகள் குறித்து விரிவான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு, விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பதால் லண்டன் செல்லும் அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக, சென்னை – லண்டன் செல்லத் தயாராக இருந்த பயணிகள் அனைவரும் விமான நிறுவனத்தின் சார்பில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமானம் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


