கழுத்தை நெறிக்கும் சிபிஐ..டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு.!

கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட நான்கு பேர் டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் குறித்த விசாரணை சமீப நாட்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. எனினும், விசாரணை முழுமையடையாததால், மறுநாள் கரூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கேள்விகள் தொடர்ந்தன. இது விசாரணையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேலும் முன்னேறும் நிலையில், மேற்படி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடுதல் விசாரணை நடைபெறும்.

டெல்லி இந்த விவகாரத்தை தீவிரமாக கையாள்வது விஜய் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம். முக்கியமாக தவெக தலைகளை டெல்லிக்கு வர சொன்னது விஜயை கடுமையான அதிர்ச்சிக்கு தள்ளி உள்ளதாம். டெல்லி இதில் இவ்வளவு கடுமை காட்டும் என்று அவர் நினைக்கவே இல்லையாம்.

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக “சீரியஸ்” முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது. கடந்த சிபிஐ விசாரணையில் பின் வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 27 அன்று மதியம் 3 மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தும், நண்பகல் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கச் சொன்னது யார்?
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது, சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா?
கூட்டத்தில் மயக்கமடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சைத் தொடர்ந்தார்?
கரூர் கூட்டத்தை கருதி, வேறு இடத்தில் கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்களா?
காவல்துறை அறிவுறுத்தல்களை மீறி, கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை நகர்த்த உத்தரவிட்டது யார்? நண்பகல் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு, விஜய் இரவு 7 மணிக்கு வர காரணம் என்ன? தொண்டர்களின் வருகையையும், மற்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யார்? கூட்டத்தை பெரியதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த தாமதம் திட்டமிட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
சிபிஐ விசாரணையின்போது, நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதே பதில்களை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *