காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடகத்திடம் தமிழ்நாடு அரசு ஒரு இலட்சம் கோடி இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும், அதைத் தர மறுத்தால் அந்த அரசைக் கலைக்க வேண்டும் என்றும் விவசாயச் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரிப் பாசன மாவட்டங்களுக்காகச் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் முதல் நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். நொடிக்கு ஏழாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவிரி ஆற்றில் ஓரளவுத் தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் தென்னிந்திய ஆறுகள் இணைப்பு விவசாயச் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசு மறுத்து வருவதாகத் தெரிவித்தார். அதனால்தான் மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு அரசால் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை என்றார்.
செப்டம்பர் முதல் நாளில் இருந்து நொடிக்கு ஏழாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாகவும், குறைந்தது நொடிக்குப் பதினெட்டாயிரம் கனஅடி நீர் திறந்தால்தான் விவசாயிகள் நெல் பயிரிடும் வேலையைத் தொடங்க முடியும் என்று தெரிவித்தார். தண்ணீர் திறக்காத கர்நாடக அரசிடம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும், அதை மதிக்காவிட்டால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்றும் ஐயாக்கண்ணு தெரிவித்தார்.

