இந்தியா, சீனா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் துவங்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது. இதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. எனவே ரஷ்யாவுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் எரிசக்தி துறையைக் குறிவைத்து அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா, சீனா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ரஷ்யா மீது நேரடியாகத் தடை விதிப்பது, மற்றொன்று ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அதன் பொருளாதாரத்திற்கு உதவுவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியுதவி செய்யும் நாடுகளைத் தண்டிப்பது ஆகிய இரண்டு நோக்கங்களுக்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு, 100 சதவீதம் சுங்க வரி விதிக்க இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அடுத்த 30 நாட்களில் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


