
ஸ்பீக்கர் பாக்ஸில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்! கொலையா? அலட்சியத்தால் நிகழ்ந்த மரணமா? நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கூலி தொழிலாளி திருமூர்த்தி. சில வருடங்களுக்கு முன்னர் இவருக்குத் திருமணமாகி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு திருமூர்த்தி, அவரின் மனைவி மற்றும் குழந்தையை நன்றாகக் கவனித்து வந்துள்ளார்.
செப்டம்பர் 17 ஆம் தேதியன்று இவரது 2 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த திருமூர்த்தி குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். ஆனால், குழந்தையை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துத் தானும் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.
அதே போலக் காவல் துறையினரும் தனிப்படை அமைத்து எங்குத் தேடியும் குழந்தை தென்படவில்லை. மேலும், திருப்பாலப்பந்தல் காவல் நிலைய போலீசார் சக காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்துத் தேட அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான் அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், திருமூர்த்தி வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து ஒரு வித கெட்ட வாடை அடித்துள்ளது. சந்தேகமடைந்த திருமூர்த்தி அதைத் திறந்து பார்த்தபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், குழந்தையின் உடல் அதில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து பதறிப் போன திருமூர்த்தி திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணையைத் துவக்கி உள்ளனர்.
ஆம், விளையாடிக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராதவிதமாகக் குழந்தை சிக்கிக் கொண்டதா?, கொலை செய்துவிட்டு இதில் அடைத்து வைத்தார்களா? உறவினர்கள் ஏதாவது முன் விரோதம் காரணமாகக் கொலை நிகழ்ந்ததா? அல்லது பெற்றோரின் கவனக் குறைவால் தான் இந்த மரணமா? போன்ற பல கோணங்களில் விசாரணையைத் தீவிரமாக்கி உள்ளனர்.
மேலும், வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனச் சிலரை விசாரித்ததில், போலீசாருக்கு சிறுவனின் சித்தப்பா மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரைத் தனியே அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்களையும் சோகத்தில் நிலை குலைய செய்துள்ளது.

