கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சி தொடங்கியது. இதனைக் கமலுக்கு பதில் இம்முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
தொடக்கத்தில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேற முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகிய 5 பேர் இறுதிக்கட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

தொடர்ந்து ரயான், பவித்ரா அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால் இருந்தனர். இதில் யாருக்கு கோப்பை என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விஷாலும் வெளியேறினார்.
நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற இறுதிப்போட்டியில் டைட்டில் வின்னராக யார் இருப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முத்துக்குமரன், சௌந்தர்யாவை மேடைக்கு அழைத்த விஜய் சேதுபதி, முத்துக்குமரனின் கையை உயர்த்தி ‘பிக்பாஸ் சீசன் 8’ டைட்டில் வின்னராக அறிவித்தார். இதில் 2வது இடத்தைச் சௌந்தர்யா பெற்றார்.

மேடையில் பேசிய சௌந்தர்யா, “எங்கே என் கையைப் பிடித்துத் தூக்கிவிடுவீர்களோ எனப் பயந்தேன்.
நீங்கள் இந்தக் கோப்பையை எனக்கு கொடுத்திருந்தாலும், என் தந்தை அதை வாங்கி முத்துக்குமரன் கையிலே கொடுத்திருப்பார்.
இந்தக் கோப்பைக்கு முழுவதும் தகுதியானவர் முத்துக்குமரன் தான்” எனப் புகழ்ந்தார்.

