
இந்தோனேசியாவின் பாலி தீவில் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகிவிட்டனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்திலிருந்து, நேற்று இரவு 65 பேருடன் படகு ஒன்று பாலி தீவில் உள்ள, கிலிமானுக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. படகில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்தன. கே.எம்.பி. துனு-பிரதாமா-ஜெயா என்று பெயரிடப்பட்ட படகு, புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்திற்குள்ளானது.
படகு கடலில் ஒருபக்கமாக சாய்ந்து மூழ்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
இதனால் மீட்புப் பணி சவாலாக இருந்தது. இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களை மீட்க இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில், தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
