Armstrong Murder Case:தலைநகரை அலறவிட்ட ரவுடிளை அலறவிடும் சென்னை கமிஷனர்! 77 பேரைத் தட்டித்தூக்கிய போலீஸ்!

Advertisements

சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 77 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சென்னை தலைநகர் மட்டுமல்ல தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நகரமாகும் தலைநகரம் மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குச் சந்தி சிரிக்கிறது என எதிர்க்கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

சென்னை ஆணையராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் பேட்டியளித்திருந்தார். மேலும், சென்னை பெருநகரம் முழுவதும், குற்றப் பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு அதிரடி உத்தரவும் பிறப்பித்தார்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்கள் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான இந்தச் சிறப்பு சோதனையில் R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஐயப்பன் (33) த/பெ.மணி. S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் டேனியல் ஜோசப் (24) த/பெ.சதீஷ்குமார் மற்றும் நவீன்குமார் (25) த/பெ.கண்ணன், S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அருண் (23) த/பெ.அசோக், D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கலைமணி (30) த/பெ.சுப்பிரமணி, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சஞ்சய், (24) த/பெ.தர்காமோகன், J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நெல்சன் (47), த/பெ.பொன்னப்பன் ஆகிய குற்றவாளிகள் உட்பட 77 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதர 04 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்புச் சோதனைகள் மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து அவர்கள்மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *