
வாஷிங்டன்:
“அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்,” என அந்நாட்டு அதிபர் ஜோப்பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு நிருபர்களிடம் அதிபர் ஜோப்பைடன், 200 ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது. மக்கள் அமைதியாக ஓட்டளித்து தங்கள் தலைவரைத் தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும். அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டிரம்ப்பை நேற்று அழைத்துப் பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்து உள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர்.
கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி, பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம். ஜன.,20ல் அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும் என ஜோப்பைடன் கூறியுள்ளார்.


