
லக்னோ: இண்டியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகும். தனித்து போட்டியிடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஓரம்ச குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் உருவாக்கிய கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேச ஆரம்பித்ததில், இருந்து பிரச்னையையும் தலை தூக்க ஆரம்பித்து உள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா அறிவித்தார். பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவித்து உள்ளார். இதையடுத்து இண்டியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகும். தனித்து போட்டியிடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், அகிலேஷ் யாதவ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உத்திரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும், 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 11 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உ.பியில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.



