
மும்பை: ‘லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி உடையும்’ என மஹா., வில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாந்தேட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நேற்று முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்கட்ட தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்துள்ளனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. தே.ஜ., கூட்டணிக்குச் சாதகமாக உள்ளன.
லோக்சபா தேர்தலில் 25 சதவீதம் இடங்களில் இண்டியா கூட்டணியினர் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி உடையும்.குடியுரிமை திருத்தச் சட்டம் இல்லாவிட்டால், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த சீக்கியர்களின் நிலைமை என்னவாகும். மஹாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பல தசாப்தங்களாகக் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்துவிட்டனர், எனவே ராஜ்யசபா எம்.பி., ஆகி உள்ளனர். அமேதி தொகுதியிலிருந்து வெளியேறிய ராகுல் வயநாட்டில் இருந்தும் வெளியேற்றப்படுவார்.
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு, முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இண்டியா கூட்டணியின் தலைவர் யார் என்பதை சொல்ல முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

