
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கையாள வேண்டிய உத்திகள் குறித்துச் சென்னையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக ஆகியன ஓரணியில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு எல்லாம் முடிந்தது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளில் பல்வேறு வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்றும், திங்கட்கிழமையும் என இருநாட்கள் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கான நாள் உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கிண்டியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தேர்தலில் வெற்றிபெறக் கையாள வேண்டிய உத்திகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதில் பாஜக சார்பில் அண்ணாமலை, தமிழிசை, நாகேந்திரன், மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் அதிமுக, பாமக, அமமுக கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.



