டி51 படத்தின் படப்பிடிப்புற்காக திருப்பதி சென்றுள்ள நடிகர் தனுஷ், இன்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தனது 50-வது படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தனுஷே இயக்கியும் உள்ளார்.
இதுதவிர தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். அப்படத்தில் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என மிகப்பெரிய இளம் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் தெலுங்கு இயக்குனர் ஷேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் டி51 படத்திலும் நடித்து வருகிறார்.
டி51 படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. அங்கு ஷூட்டிங் நடைபெற்றதால் தனுஷை காண ரசிகர்கள் ஏராளமாக குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்ட காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தன் அக்கா உடன் திருப்பதி கோவிலுக்கு வந்த தனுஷுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தனுஷுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த தனுஷை காண ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் உதவியுடன் பத்திரமாக காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார் தனுஷ்.
