ரவுடிகள் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை – முதலமைச்சர்!

Advertisements

சென்னை:

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், “அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்” என்று தான் என்னைச் சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான்.

போராடலாம், தவறு இல்லை; போராட வேண்டிய இடத்தில் போராடலாம், போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம், தவறில்லை. இத்தகைய போராட்டங்களுக்குரிய காலத்தில் அனுமதி கேட்டால் நாங்கள் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்.

சட்டம்-ஒழுங்கைப் பற்றிச் சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள்மேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் கொலைகள், ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலைச்சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் தொடர்புடைய சாதிய கொலைச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. எங்கும் அமைதி நிலை நாட்டப்பட்டு வருகிறது. குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது.

அதனை மீறியும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாகக் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவதுமில்லை.

உரிய தண்டனை, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதில் யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது.

பெரும்பாலான கொலைகள் குடும்பப் பிரச்சனை, காதல் விவகாரம், பணம் கொடுக்கல்-வாங்கல், நிலப்பிரச்சனை, தனிப்பட்ட முன் விரோதம், வாய்த்தகராறு போன்ற காரணங்களுக்காகவே நடந்திருக்கின்றன.

அரசியல் காரணங்கள், சாதிய கொலைகள், மதரீதியான கொலைகள், ரவுடி கொலைகள் தி.மு.க. ஆட்சியில் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *