
மாட்டு தொழுவத்தில் பெரிய ராஜநாகத்துடன், பதுங்கியிருந்த 52 பாம்புக் குட்டிகளை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.
மூணாறு: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்தத் தொழுவம் காலியாகக் கிடந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனைப் பார்த்த ராதாகிருஷ்ணன், அந்தப் பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கிப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவை அவரது மாட்டு தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. அங்கு அதிகளவில் குட்டி பாம்புகள் இருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சென்று பார்த்தனர். அப்போது அங்குப் பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும் அங்கு இருந்த குட்டி பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது. பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன.
இதைத்தொடர்ந்து பெரிய ராஜநாகத்தை சாக்குப்பையிலும், அவற்றின் குட்டிகளைப் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தும் வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

