Chikkaballapur accident: விபத்தில் 13 பேர் பலி!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 13 பேர் பலி!

கர்நாடகா மாநிலத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பகப்பல்லி பகுதியில் இருந்து இன்று அதிகாலை சிக்கபல்லபூர் பகுதிக்கு 10க்கும் மேற்பட்டோர் டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தனர். கார் சிக்கபல்லபூர் அடுத்த போக்குவரத்து காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் பயங்கர சத்தத்துடன் மோதியது.

விபத்து சத்தம் கேட்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். கார் மிகவும் வேகமாக வந்ததால் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கவனிக்காமல் கார் ஓட்டுநர்  லாரியில் மோதியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *