
ஈராக்கில் திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் பலி!
பாக்தாத்: ஈராக்கில் திருமண நிகழ்வொன்றின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர், 150 பேர் காயமடைந்ததாகத் தெரியவந்துள்ளது.
வடக்கு ஈராக் நகரமான அல்ஹம்டனியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள மண்டபம் ஒன்றில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென அங்குத் தீ விபத்து ஏற்பட்டதில், தீ மளமளவென மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிகளுக்கும் பரவியது. இதனால் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

இந்தத் தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ ஈராக் பத்திரிகை நிறுவனமான ஐ.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் எனக் கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

