
டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலையடுத்துச் சீனாவுடனான வணிகத்துக்கு இந்தியா மும்முரமாகத் தயாராகி வருகிறது. எல்லைப் பிரச்சனை இப்போது பெரிதாக இல்லாத நிலையில், வணிகத்துக்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
எங்கள் நாட்டுப் பொருட்களுக்கான வரியைக் குறைக்கவில்லையெனில் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனைச் சமாளிக்கச் சீனாவுடன் வியாபாரம் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களிடையே நிகழ்ந்த மோதலையடுத்து இந்தியா-சீனாவுக்கு இடையே பொருளாதார மோதல்களும் வெடித்தன. சீனாவின் சில பொருட்களுக்கு இந்தியா அதிரடியாகத் தடை விதித்தது. அது மட்டுமல்லாது சீன மொபைல் செயலிகளும் முடக்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆகவே நாம் மாற்று வணிகக் கூட்டாளியைத் தேட வேண்டும். சீனா நல்ல தேர்வுதான். இன்றைய சூழலில் இந்தியா-சீனா இடையே சொல்லிக்கொள்ளும்படியான எல்லைப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. எனவே வணிகத்தை மீண்டும் இயல்பாக்குவதற்குச் சரியான நேரம் இதுதான்.
முதல் கட்டமாகச் சீன ஊழியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, சீன மொபைல் செயலிகளை மீண்டும் அனுமதிப்பது, சில சீன பொருட்கள் இறக்குமதிக்கான வரிகள் மற்றும் வரி இல்லாத பொருட்களுக்கான வணிகத் தடைகளை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியா-சீனா இடையே பொருளாதார உறவை நாம் பழைய நிலைமைக்குக் கொண்டு வரலாம்.
உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகச் சீனா இருப்பதால், அந்நாட்டுடன் வணிகம் செய்வது நமக்கு இலாபகரமான விஷயம்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய பொருட்களைச் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவும் நம்மால் முடியும். அதாவது, இன்றைய தேதியில் சீனாவிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிகப் பொருட்கள் வருகின்றன. இந்தியாவிலிருந்து அங்குப் பொருட்கள் குறைவாகத்தான் ஏற்றுமதியாகிறது. இரண்டுக்கும் இடையே சுமார் 6 இலட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகப் பற்றாக்குறை இருக்கிறது.
சீனாவை முதன்மை முதலீட்டாளராக நாம் ஏற்றுக்கொண்டால் இதனைச் சரி செய்துவிடலாம். மறுபுறம் சீன நிறுவனங்களும் இந்தியாவில் வியாபாரம் செய்ய ஆர்வமாக இருக்கின்றன. எனவே இந்திய-சீன நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து வணிகத்தைத் தொடர நாம் அனுமதிக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அமெரிக்கா ஜர்க் ஆகிவிடும். ஏற்கெனவே பிரிக்ஸ் கரன்சி விஷயத்தைக் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு டிரம்ப் கண்காணித்து வருகிறார். அப்படி இருக்கும்போது பிரிக்ஸ் கூட்டமைப்பு மேலும் உறுதியாக்கும் விதமாக இந்தியா-சீனா வணிகம் அமைந்துவிட்டால் அது அமெரிக்காவுக்குப் பின்னடைவுதான்.
சீனாவுடன் பிசினஸ் செய்யத் தயாரானால் சில நிபந்தனைகளை நாம் ஏற்க வேண்டி வரும். குறிப்பாக அந்நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை அனுமதிப்பது, மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது ஆகியவற்றை இந்தியா அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் சீனாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் சீனப் பொருட்கள் இங்கு வந்து அசெம்பிள் ஆகும். இதற்காக இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். 2024 பொருளாதார ஆய்வும் இதையேதான் சொல்கிறது.
இந்தியா-சீனா இடையே உறவு மலர்கிறதா? அல்லது அரசியல் நோக்கங்களுக்காக வாய்ப்பை நாம் தவறவிடப்போகிறோமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
