
சமையல் செய்வதை விடப் பெரிய சிக்கல் காலையில் சமைத்து மீந்த சாதத்தை மறுபடியும் எப்படி வீணாக்காமல் சமைக்க முடியும் என்று யோசிப்பது தான். ஏனென்றால் இப்போதெல்லாம் மீந்த சாதத்தை அடுத்த வேளைக்கு கூட யாரும் சாப்பிடுவது கிடையாது. மீந்து போன சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து நிறைய ஸ்நாக்ஸ் ரெசிபிகள் நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மீந்து போன பழைய சாதத்தை வைத்து ரொம்பவே சுலபமா அதே நேரத்துல நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியா இருக்கக்கூடிய ஒரு தோசை ரெசிபி பற்றித் தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
மீந்து போன பழைய சாதத்தில் தோசை செய்முறை விளக்கம்:
இந்தத் தோசைசெய்வதற்கு காலையில் வடித்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்தும் செய்யலாம். இதற்கு முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி விட்டால் கூட அதையும் பிழிந்து போட்டு இந்தத் தோசை செய்யலாம். எப்படி செய்தாலுமே தோசை நன்றாக வரும்.

இப்போது ஒரு கப் மீந்த சாதத்தை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் தயிரையும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாவில் இரண்டு கப் ரவை, ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து முதலில் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
நாம் சாதம் அரைத்த பேஸ்ட்டிலேயே இவை எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு இந்த மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளுங்கள். இந்த மாவிற்கு தண்ணீர் அளவை பொறுத்த வரையில் நீங்கள் தோசை மாவின் பதத்திற்கு ஏற்றார் போல் கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் தோசை கல் வைத்துச் சூடானவுடன் கலந்து வைத்த மாவை நீங்கள் எப்போதும் ஊற்றுவது போல நல்ல மெலிதான தோசையாகச் சுட்டு ஒரு புறம் சிவந்த பிறகு திருப்பிப் போட்டு எடுத்து விடலாம். அருமையான கிரிஸ்பி தோசை சட்டுனு தயாராகி விட்டது.

இந்தத் தோசைக்கு காரசாரமாகச் சட்னி வகைகள் செய்து சைடிஷ் ஆகச் சாப்பிடும்போது ரொம்பவே நன்றாக இருக்கும். இந்தத் தோசையை நீங்கள் மீந்த சாதத்தில் தான் செய்தீர்கள் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை நன்றாக இருக்கும். இந்தத் தோசை ரெசிப்பி உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.


