
வந்தவாசி அருகே அரசுப் பள்ளியில், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த அத்திப்பாக்கம். அரசினர் உயர்நிலைப் பள்ளியில், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா தலைவர் ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் மு.முகமது அப்துல்லா, செயற்குழு உறுப்பினர்கள் பா.ஸ்ரீமந்த், ஆ.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கசெயலாளர் எம்.பி.வெங்கிடேசன் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்துதலைமையுரையாற்றிய வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்க தலைவர் ரகமத்துல்லா, மொழி அழிவதென்றால் மொழி மட்டும் அழியாது.இனமே அழியும் என்றான் மாவீரன் நெப்போலியன்.மற்ற கற்கும் மொழிகள் மூளை என்றால், தாய்மொழி என்பது இதயம்.தமிழ் மொழி என்பது கவுரவம். தாய்மொழி என்பது கம்பீரம். நாங்கள் கற்றுக்கொடுக்க உங்களுக்கு ஏதுமில்லை. நீங்கள் இசையின் மூலமாகவும், நடனம் மூலமாகவும் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக் கிறீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி. மாணவர்களுக்குப் புத்தகம் வேண்டும் என்றால் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தை அணுகலாம். மாணவர்களின் அத்தகைய கோரிக்கைகளுக்காகச் சங்கம் காத்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய அத்திப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் ப.கருணாகரன்
தமிழ்மொழி சிறப்புகுறித்து சிறப்புரையாற்றுகையில், 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தைப் பாராட்டுகிறேன். உங்களை ஊக்குவிக்க வேண்டும். நல்ல திசைவழியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விழாக்கள் முன்னெடுக்கப் படுகின்றன.உங்களுக்குக் கிடைத்த ஆசிரியர்கள் திறமை மிகுந்தவர்கள்.அதனாலேயே இந்த அத்திப்பாக்கம் பள்ளி சிறப்பான நிலையை அடைந்துள்ளது. பாடப்புத்தகங்கள் படிப்பதோடு நின்று விடாமல் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பலவிதமான நூல்களைப் படிக்க வேண்டும்.அவைகள் உங்களைப் பண்படுத்தும்.உலகில் பல மொழிகள் வழக்கொழிந்து போய்விட்டன.ஆனால், தமிழ் வாழும். இத்தகைய சங்கங்களின் உழைப்பும் ஊக்கமும் இருக்கையில் தமிழ் நிச்சயம் வாழும்.அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துகள் என்று பேசினார்.
அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் ர.ரகமத், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் எ.தேவா, வாழ்த்துரை வழங்கினர்.சங்க துணைச்செயலாளர் கவிஞர் தமிழ் ராசா தமிழ்மொழி குறித்த வாழ்த்துக் கவிதை வாசித்தார்.
முன்னதாக, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன் தமிழிசைப் பாடல் பாடினார். தமிழின் சிறப்பைப் பறை சாற்றும் வகையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறைவாக, அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

