
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி., யுமான ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்து மிகக் கவலையுற்றேன். அன்பான ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். கேரளாவுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும். மாநில முதல்வருடன் போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
காங்., எம்.பி., ராகுல்
நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலைகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டு அறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையைத் தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளனர்.
பிரதமர் நிதியில் நிவாரணம்
நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், காயமுற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

