
ஆமதாபாத்: சென்னை – மைசூர், மங்களூரு- திருவனந்தபுரம் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவையைக் குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து காணொளி வாயிலாகப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் 85,000 கோடிக்கு மேலான ரயில் திட்டங்களைத் துவக்கி வைத்தார்.
பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று துவக்கப்பட்டது. எனினும், இந்த ரயில் ஏப்ரல் 4ம் தேதிவரை சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து வாரத்தில் புதன் தவிர மற்ற நாட்களில் மாலை 5:00 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 9:15 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக, பெங்களூரிலிருந்து காலை 7:50க்கு புறப்படும் ரயில், அதேநாள் நண்பகல் 12:25 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி நிறுத்தங்களில் நின்றுசெல்லும். ஏப்.,5ம் தேதி முதல் மைசூரு – சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை துவங்கும். மைசூரிலிருந்து காலை 6:00 மணிக்குப் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25க்கு வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 11:20 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சென்னையிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஒரே நாளில் சென்னை-மைசூரு, ஆமதாபாத்- மும்பை, செகந்திராபாத்- விசாகப்பட்டினம், ராஞ்சி-வாரணாசி, ஜல்பைகுரி-பாட்னா, பாட்னா-லக்னோ, லக்னோ-டேராடூன் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

