
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற மிதிவண்டிப் பேரணியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் ரக்சா காட்சே ஆகியோர் கலந்துகொண்டனர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வுக்காக வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் சார்பில் மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ரக்சா காட்சே ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் தெரிவித்தனர். போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட அழிவுச்செயல்களுக்கு மாணவர்கள் ஆளாகிவிடக் கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேபோல் தில்லி ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மிதிவண்டிப் பேரணியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த மிதிவண்டிப் பேரணியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் வந்து ஆர்வத்துடன் பேரணியில் கலந்துகொண்டனர்.



