
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). தனது மகன் வீரமுத்து (30)வுடன் பைக்கில் பெரியகுளத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் வீரமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகினர். இதைப் பார்த்ததும் சரக்கு வாகன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரைத் தேடி வருகின்றனர். புத்தாண்டு தினமான இன்று விபத்தில் தந்தை மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


