
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவைத் திமுக அமைத்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் இந்தக் குழுவுடன் இதுவரை மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழுவினர் திமுக குழுவினருடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தியுள்ளனர்.
பேச்சு நடத்திய பின் வெளியே வந்த செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்று தருவதாகத் திமுக உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தலைவர் வேல்முருகன் பேச்சு நடத்தினார். மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் பங்கேற்றார்.



