
சட்டப்பேரவையில் தேவையற்ற வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று கூறினார். தேவையற்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னரே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நிதிச்சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை தன்னலம் கருதாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு கார் மற்றும் உதவியாளர்கள் அவசியமானது என்றும் தெரிவித்தார். முந்தைய திமுக ஆட்சியிலும் இதுபோன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும அவர் சுட்டிக்காட்டினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், மேகதாது விவகாரத்தில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்..



