டெல்லி மீட்டிங்கில் நடந்தது இதுதான்.. !

Advertisements

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகாவின் மகாயுதி கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கூட்டணியில் பாஜக 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது, ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன.அடுத்த முதல்வராக யார் என்பதில் பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி நிலவியது.

ஷிண்டே ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துப் பட்னாவிஸ், அஜித் பவாருடன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த போதும் இழுபறியான சூழலே நிலவி வருகிறது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதியுடன் மகாராஷ்டிர சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது தாமதம் ஆகி வருகிறது.

இந்த நிலையில்தான் முதல்வர் பதவி பாஜகவுக்கு செல்லும் எனக் கூட்டணியில் உள்ள என்சிபி தலைவர் அஜித் பவார் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். டெல்லியில் மகாயுதி தலைவர்கள் கூட்டத்தில் பாஜவிலிருந்து முதல்வரை முன்னிறுத்தி மகாயுதி ஆட்சி அமைப்பது என்றும், மீதமுள்ள இரண்டு கட்சிகளுக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 1999ல், ஆட்சி அமைக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். முதல்வர் உறுதியானாலும் அமைச்சரவை பங்கீட்டில் ஷிண்டே கறார் காட்டி வருவதாகத் தெரிகிறது. நிதி உள்ளிட்ட இலாகாவை ஷிண்டே தங்கள் அணிக்கே கோரி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேவின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார் எனவும் தவகவல்கள் வெளியாகி உள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ஷிண்டேவுக்கு சிகிச்சை அளித்து வரும் குடும்ப மருத்துவர் ஆர்.எம்.பாட்ரே, கடந்த இரண்டு நாட்களாகக் காய்ச்சல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மூன்று முதல் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறது என்று பாட்ரே தெரிவித்தார்.

இதற்கிடையே புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் மாலை 5 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறும் என்று சந்திரசேகர் X இல் பதிவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *