
உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப் வழிகாட்டுதலில் செல்வது வழக்கம். அவ்வாறு கூகுள் மேப்பின் வழிகாட்டுதலில் செல்லும்போது சில நேரங்களில் தவறான வழியில் செல்வதுண்டு. சில நேரங்களில் எதாவது விபரீதமான இடத்திற்கு வழிகாட்டிவிடும். உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது.
நேற்று பரேலியிலிருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கிச் சென்றபோது, ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்குக் கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது. சேதமடைந்த காரைப் பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றிலிருந்து அதனை வெளியே எடுத்தனர்.
இந்நிலையில், காரில் இருந்த மூவரும் உயிரிழந்ததை கண்டனர். விபத்துகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.


