Tenkasi:சங்கரநாராயண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Advertisements

கோவில் விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானங்களில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) நடந்தது. அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் வண்ணம் தீட்டப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 16-ந் தேதி மாலையில் வேத பாராயணம், திருமுறை பாராயணத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

17-ந்தேதி பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. 19-ந் தேதி அனைத்து பரிவாரமூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடைபெற்றது. 20-ம் தேதி இரவு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு, மாலையில் ஐந்தாம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று காலை 6.30 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி விமானம், ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *