
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தும் அரசிதழில் வெளியிடாததால் ஏற்றுமதிக்குச் சிக்கல் ஏற்படுவதாகக் கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் மரச் சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வகையான மரங்களில் கலைநயத்தோடு சிற்பம் செதுக்கி உலக அளவில் வணிகம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு 2020 – 2021 நிதியாண்டில் தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கியது. இதனால் கைவினைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதைத் தமிழக அரசிதழில் வெளியிடாததால் தம்மம்பட்டியில் உருவாகும் மரச் சிற்பங்களுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



