
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை மிதித்துப் பாகன் உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானை அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். இன்றும் வழக்கம்போல் அந்த யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது யானையின் பாகன் உதயகுமார் அருகில் இருந்துள்ளார். அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் என்பவரும் உடன் இருந்துள்ளார்.
யானை தெய்வானைக்கு அவ்வப்போது பழங்கள், உணவு கொடுப்பது வழக்கம். அதன்படி, பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது யானை திடீரெனத் திமிறி உள்ளது. நொடிப்பொழுதில் ஆக்ரோஷம் கொண்டு அருகில் இருந்த பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தூக்கி போட்டு மிதித்தது.
இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார். யானையின் ஆக்ரோஷத்தை கண்டு அங்கு வந்திருந்த பக்தர்கள் பீதி அடைந்து ஓடினர்.
தகவலறிந்த கோவில் ஊழியர்கள் போலீசுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து விட்டு, யானை தெய்வானையை வழக்கமாகக் கட்டி வைக்கப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்குப் பலத்த பாதுகாப்புடன் யானையைக் கூண்டுக்குள் அடைத்து வைத்தனர். நீரை பீய்ச்சி அடித்து யானையின் ஆக்ரோஷத்தை கோவில் ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.
சம்பவம்பற்றிக் கால்நடை மருத்துவக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யானையை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே எதனால் ஆக்ரோஷம் ஏற்பட்டது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் என்று கோவில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


