
சென்னை: பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பிடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகையிடமிருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தைப் பெற்றோர் நாடியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தியெனப் படுபிஸியான நடிகையாக இருக்கும் தமன்னா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவலயா பாடலுக்கு ஆட்டம் போட்டு மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். அண்மையில் தமன்னா லீடு ரோலில் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.
சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா போட்டி போட்டு நடித்த அரண்மனை4 திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுக்கு தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் தமன்னாவுக்கு குவிந்து வருகின்றன. அரண்மனை ஐந்து படத்திலும் தமன்னாவை நடிக்க வைக்கச் சுந்தர் சி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது- அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமன்னா சம்பளத்தை கணிசமாக ஏற்று விட்டார் என்று கூறப்படுகிறது.

தமன்னா பற்றிய பாடம்: இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சிந்தி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த திரைப்படங்கள் பற்றியும், அவரது நடிப்பு பற்றியும் அதில் இடம் பெற்றுள்ளது.
தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களின் பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். அத்துடன் பள்ளி நிர்வாகத்தையும் அவர்கள் கண்டித்துள்ளனர். ஒரு நடிகையிடமிருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேள்வி கேட்டுள்ளனர்.

