
கடந்த 3 ஆண்டுகளாகத் தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றனர் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாகத் தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சி காலம் ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய நண்பர். நாங்கள் 2 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற 24ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். அ.ம.மு.க. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பேரூர் செயலாளர் ராஜா, அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவசெல்வம், திருமலை, நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


