இந்தியாவில் 11 மாநிலங்களின் சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை அவர்களது சாதிய பின்புலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருப்பது, சிறைகளில் மிக மோசமான வேலைகளை அவர்களைச் செய்யச் சொல்வது உள்ளிட்ட அணுகுமுறை விதிகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைச் சாதிய ரீதியில் வகைப்படுத்திய பதிவுகள் சட்ட விரோதமானவை என்றும், அவை அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட மாநிலங்கள் வகுத்துள்ள சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக இருப்பதாகத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய தீர்ப்பின்படி சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
சிறைகளில் எஸ்.சி., எஸ்.டி மக்களைப் பாகுபாடுடன் நடத்தக் கூடாது என்றும், அவ்வாறு சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

