தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. சுமார் 25 வருடங்களாக கலை துறையில் குறிப்பாக ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறார். அதுமட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் வகையிலும், படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார் போலவும் வடிவமைப்பதில் வல்லவர்.
அண்மையில் வெளியான ருத்ரன், விடுதலை, கஸ்டடி போன்ற படங்கள் இவர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய படங்கள் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்திலும் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சிவா தான் வடிவமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் விரைவில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆக உள்ளார்.
கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார் கெவின் குமார். கடந்த வருடம் தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ மற்றும் தற்போது தயாராகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆகிய படங்களில் ஒரு சில சண்டைக் காட்சிகளை தானே வடிவமைத்துள்ளார் கெவின் குமார்.
இவர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த பாங்கை பார்த்து அசந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை பாராட்டி உள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டராக வரவேண்டும் என தனது வாழ்த்தை வழங்கியுள்ளார்.