
மதுபோதையில் ஓவராகப் பேசிவிட்டேன் என்று காவலர்களைத் தரக்குறைவாகப் பேசிய ஜோடி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாகப் பேசி உள்ளனர். அவர்களைக் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாகப் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்… பார்க்கிறாயா? எனத் துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.
போலீசாரை அநாகரிகமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள்.
போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் ஓவராகப் பேசிவிட்டேன் என்று அந்த ஜோடி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையெனத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

