
நாய்களைப் படுகொலை செய்வது, இனப்பெருக்கம் செய்தல், வியாபாரம் மற்றும் விற்பனை செய்வது சட்டவிரோதமானதாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2-3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.
சியோல்: தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்யும் முக்கிய சட்ட மசோதாவிற்கு தேசிய சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்கொரியாவில் பழமையான பழக்கவழக்கங்களில் நாய் இறைச்சி உண்பதும் ஒன்றாகும். எனவே தென்கொரிய மக்கள் நாய் இறைச்சியை விரும்பிச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.
இந்நிலையில் தென்கொரிய மக்களின் இந்தப் பழக்கத்துக்குச் சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து நாய் இறைச்சி நுகர்வுக்கு தடை விதிப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
நாய் இறைச்சி உண்பதை தடை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு 208 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கவுன்சில் ஒப்புதல் மற்றும் அதிபர் யூன் சூக் யோல் கையெழுத்திட்டபிறகு இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்படி, 2027ம் ஆண்டு முதல் மனித நுகர்வுக்காக நாய்களைப் படுகொலை செய்வது, இனப்பெருக்கம் செய்தல், வியாபாரம் மற்றும் விற்பனை செய்வது சட்டவிரோதமானதாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2-3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

