
புதுடில்லி: தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ., எதிரானது என ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளர்.
இதுகுறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., யைப்பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்களைச் சிறைக்கு அனுப்புகிறார்கள். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியானது. பட்ஜெட்டில் மாநிலங்களுக்குப் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இடஒதுக்கீடு
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு பா.ஜ., எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களைப் பா.ஜ., ஏன் இவ்வளவு வெறுக்கிறது? ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை அவர்கள் ஏன் விரும்பவில்லை?. பா.ஜ., வின் நோக்கம் தெளிவாக இருந்தால், ஓபிசி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் தொகை
நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி, இந்த மசோதாவை ஒரு முறை அல்ல ஆயிரம் முறை வேண்டுமானாலும் ஆதரிப்போம். மக்கள் தொகை அடிப்படையில் ஓ.பி.சி., இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்த்ததன் மூலம், பா.ஜ., வின் உண்மையான முகம் நாடு முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


