ராகுல், பிரியங்கா கார்கள் தடுத்து நிறுத்தம்!

Advertisements

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதிக்குள் இந்துக் கோவில் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்மீது மக்கள் கற்களை வீசித் தாக்கினர்.

அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மசூதி ஆய்வைத் தள்ளிப்போட்டது.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடையை மீறிச் சம்பலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் சந்திக்க உள்ளார்

ராகுல் காந்தியுடன், வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி மற்றும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரும் சம்பல் மாவட்டத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் டெல்லி – நொய்டா நெடுஞ்சாலையில் காஸிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

காலை 10.15 மணியளவில் டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர்கள் 11 மணியளவில் எல்லையை அடைந்தபோது போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்தனர். இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தடுப்புகளில் ஏற முயன்றனர்.

காஸிப்பூர் போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பல் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையத் தடை இருப்பதால் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்துமாறு அம்மாவட்ட நிர்வாகம் அண்டை பகுதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *