Preity Zinta: ரோகித் சர்மா பற்றிய வதந்திக்கு ப்ரீத்தி ஜிந்தா ஆவேசம் – பின்னணி என்ன?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கப் பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று அடிப்படையற்ற போலி செய்திகளை, வதந்திகளைப் பரப்புகின்றனர் என்று பிரீத்தி ஜிந்தா காட்டமாக மறுத்துள்ளார்.

“பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் காயமடைந்ததால் இத்தகைய செய்திகளை உருவாக்குகின்றனர். இது நல்ல விஷயமே அல்ல” என்று பிரீத்தி ஜிந்தா செய்திகள் வெளியாகும் தருணத்தையும் குறிப்பிட்டு வேதனையுடன் மறுத்துள்ளார்.

முன்னதாக, ஷிகர் தவான் காயமடைந்ததால் இப்போதைக்கு சில போட்டிகளில் ஆடவில்லை. ஆனால், அவர் காயமடையவில்லை, அவரை ஓரங்கட்ட பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார். ரோகித் சர்மாவை பஞ்சாப் கேப்டனாக இழுக்க முயல்கிறார் என்ற செய்திகள் வளைய வரத் தொடங்கின.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பக்கத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்ட தன் மறுப்புப் பதிவில், “போலிச் செய்தி! இது தொடர்பாக வெளியாகும் அனைத்துச் செய்திகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரது விசிறி. நான் இது தொடர்பாக எந்த ஒரு நேர்காணலிலோ அல்லது எந்த இடத்திலும் ரோகித் சர்மா பற்றிப் பேசவேயில்லை.

மேலும், ஷிகர் தவான் மீதும் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அவர் காயம் அடைந்திருக்கும்போது இப்படிப்பட்ட வதந்திகளை உருவாக்குவது நல்லது அல்ல.

ஆன்லைன் ஊடகங்களில் எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு போலியாக வெளியாகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம். யாரும் இது சரியா என்பதையும் சரிபார்ப்பதில்லை. எனவே, இத்தகைய தர்ம சங்கடமான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போதைக்கு எங்கள் அணி கிரேட் டீம்தான். வெல்வதுதான் எங்கள் குறிக்கோள். நன்றி” என்று ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 7 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *