
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடி இருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்த பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எம்.பி. தொல் திருமாவளவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்துகொண்டார். அவருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசி இருந்தார் பிரகாஷ் ராஜ்.
அவர் பேசியதாவது : “நான் இந்த மேடையில் நிற்க மக்கள் தான் காரணம். மக்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால் அந்தச் சமுதாயமே கோழையாகிவிடும். நான் என்றும் மக்களின் குரலாகவே இருப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் ஒரு மன்னரை எதிர்த்துகொண்டே இருக்கிறேன். இனி அவரை மன்னர் எனச் சொல்ல முடியாது, அவர் தெய்வக் குழந்தை ஆகிவிட்டார். இனி நாம் அவரைத் தேர்ந்தெடுக்க முடியாது.
அவரால் நாட்டுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவரை நாம் திட்டவும் முடியாது. இதையெல்லாம் பார்க்கும்போது தெய்வம் சோதிக்கிறது என்று தான் சொல்ல முடியும். ஒருவேளை அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்தால் இந்த நாடு எப்படி போயிருக்குமோ என நினைக்கவே பயமா இருக்கு. அம்பேத்கரின் சிந்தனைகள் பசியாலோ, வறுமையாலோ பிறந்ததல்ல, அவமானத்தால் பிறந்தது.
மோடி ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார், விமானத்தில் மட்டுமே வருவார், மக்கள் பூப்போட்டு வரவேற்பார்கள். ஒருபோதும் அவர் மக்கள் பக்கம் நிற்கமாட்டார். மக்களின் வியர்வையை தொடாதவன், அவர்களின் பசியை அறியாதவன் எப்படி மக்களைப் பற்றிப் புரிந்துகொள்வான். அவன் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி. கடந்த 10 வருஷமா பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறார்.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும்போது நான் ஆர்.எஸ்.எஸ். காரன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் எனச் சொல்கிறார். இதன்மூலம் அந்த நபர் நீதிபதியாக இருக்கும்போது எப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்கி இருப்பார் என்று தெரியாதா. இவரும் ஹிட்லர் மாதிரியான ஆட்களிலிருந்து வந்தவர் தான். இவரை மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை. இயற்கையே இது போன்ற ஆட்களை ஜீரணிக்காது, துப்பி விடும்” எனப் பேசி இருக்கிறார்.

