
இசைக்க வந்த மாணவியை இச்சைக்கு இணங்கவைத்த ஆசிரியர்…
விழுப்புரம்: ஆரோவில் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் சீண்டல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்கு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. பத்தாம் வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளியில் சுமார் 500 மாணவர்கள்வரை படித்து வருகின்றனர்.
கடந்த 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதான ஏழாம் வகுப்பு மாணவி பள்ளியில் உள்ள இசை வகுப்புக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியரிடம் இசை ஆசிரியர் சங்கராபரணம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றிப் பாதிக்கப்பட்ட மாணவி சக மாணவியிடம் தெரிவிக்கவே, சக மாணவி பள்ளியில் நடந்த சம்பவம்குறித்து அவருடைய தாயிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயும், சக மாணவியின் தாயும் மறுநாள் பள்ளிக்கு வந்து இசையாசிரியர் சங்கராபரணத்தின் பாலியல் சீண்டல் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம்குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாணவியிடம் படிக்கும் சக மாணவி பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு இந்தச் சம்பவம்குறித்து நடவடிக்கை மேற்கொள்ளக் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் பரிந்துரை செய்தனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா, இசை ஆசிரியர் சங்கராபரணம் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்தச் சம்பவம் அறிந்ததும் இசை ஆசிரியர் சங்கராபரணத்தை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியதையடுத்து சங்கராபரணம் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கராபரணம் ஆரோவில்லில் பல ஆண்டுகளாகத் தங்கிப் பணியாற்றி ஆரோவில் வாசியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆரோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் சீண்டல் உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


