Opposition MPs Protest: காந்தி சிலை முன் போராட்டம்!

Advertisements

நாடாளுமன்றத்திலிருந்து 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த பூஜ்யநேர விவாதத்தின்போது, திடீரெனப் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து 2 பேர் அவைக்குள் குதித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வண்ணப்புகைகுண்டுகளை வீசியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவையிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *