
சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்குச் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளைப் பராமரிக்கவே இந்தச் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில், “மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூல் செய்யக் கூடாது.
குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக்கொண்டு அங்குச் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.


